மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 65,000 புள்ளிகளைத்தாண்டி நிறைவு…! முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் வர்த்தகமாகத்தை நிறைவு செய்துள்ளது.

கடந்த 2 வாரங்களாகவே இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. முந்தைய வர்த்தக நாளில் சென்செக்ஸ் 64,000 புள்ளிகளை தாண்டி புதிய சாதனையை படைத்தது. அதே போல, இன்று மும்பை பங்குச்சந்தை மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 65,000 புள்ளிகளைத்தாண்டி வர்த்தகமானது.

அதன்படி, இன்றைய வர்த்தக நாளில் 64,836 புள்ளிகளாக தொடங்கிய பிஎஸ்இ சென்செக்ஸ், வர்த்தக நாளின் முடிவில் 486.49 புள்ளிகள் அல்லது 0.75% உயர்ந்து 65,205 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 133.50 புள்ளிகள் அல்லது 0.70% உயர்ந்து 19,322 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 64,718 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,189 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. சென்செக்ஸ் குறியீடு 65 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகம் நடைபெற்று வருவதால் முதலீட்டாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.

பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால் சென்செக்ஸ் குறியீட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி லிமிடெட், பஜாஜ் ஃபைனான்ஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், மாருதி சுசுகி இந்தியா, லார்சன் & டூப்ரோ, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.