குஜராத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணவில்லை…வெளிவந்த அதிர்ச்சி தகவல்.,!

குஜராத்தில் ஐந்தாண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்று புள்ளி விவர அறிக்கை தெரிவிக்கிறது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கி 2020 வரையிலான காலகட்டத்தில் 40,000 க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, 2016-ல் 7,105 பெண்களும், 2017-ல் 7,712 பெண்களும், 2018-ல் 9,246 பெண்களும், 2019-ல் 9,268 பெண்களும் காணாமல் போயுள்ளனர்.

மேலும் 2020இல் 8,290 பெண்களை சேர்த்து மொத்த எண்ணிக்கை 41,621 ஆக உள்ளது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், குஜராத் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினருமான சுதிர் சின்ஹா கூறும்போது, சில காணாமல் போன வழக்குகளில், சிறுமிகள் மற்றும் பெண்கள் குஜராத்தைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு விபச்சாரத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்களா என்று விசாரித்து வருவதாகக் கூறினார்.

காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளை காவல்துறையினர் தீவிரமாக விசாரிக்காகாது தான், இதற்கு முக்கிய பிரச்னையாகக் கருதப்படுகிறது. இது போன்ற வழக்குகள் கொலையை விட தீவிரமானது, காணாமல் போன வழக்கை ஒரு கொலை வழக்கைப் போல கடுமையாக விசாரிக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

முன்னாள் கூடுதல் காவல்துறை இயக்குநர் டாக்டர் ராஜன் பிரியதர்ஷி கூறுகையில், பெண்கள் காணாமல் போனதற்கு மனித கடத்தல் தான் காரணம், சட்டவிரோதமாக கடத்திச்சென்று வேறு மாநிலத்திற்கு கொண்டு விற்பனை செய்வதாகக் கூறினார்.