நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க பள்ளியில் காலை உணவை ஆய்வு செய்து பின்னர், சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி.
தமிழக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவ்வப்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகிறார். குறிப்பாக முதலமைச்சர் காலை உணவு திட்டம் செயல்பாடு குறித்தும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
காலை உணவு : இன்று காலை நாமக்கல், அழகு நகரில் உள்ள தொடக்கப்பள்ளியில் செய்லபடுத்தப்பட்டு வரும் முதலமைச்சர் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், அங்குள்ள பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து காலை உணவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாப்பிட்டார்.
ஜல்லிக்கட்டு : அதன் பிறகு, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் சென்று தொடங்கி வைத்துள்ளார்.இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுற்றுவட்டாரத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்றுள்ன. அதே போல, 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
மாடுகளை பிடித்த வீரர்களுக்கு சைக்கிள், கட்டில் போன்ற ஏராளமான பரிசுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதே போல பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏரளமான பொதுமக்கள் கூடியுள்ளனர்.