தேவையின்றி பேசுவதை தவிர்த்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும்.. அமைச்சர் சிவசங்கர்!

ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதுமான வசதி இல்லாததால், கோயம்பேட்டில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என்றும் அவ்வாறு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் தர வேண்டும் எனவும் உரிமையாளர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். அதன்படி, நேற்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் சென்னை நகருக்குள் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால், நேற்று முதலே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எந்த பேருந்து நிலையம் என்று பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

செய்தியாளர் மீது தாக்குதல்! கண்டனம் தெரிவித்து நிவாரணம் அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இந்த நிலையில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் இணைந்து அமைச்சர் சிவசங்கர் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து நேற்று 440 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கு 7,000 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதல் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக 200 நடை பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. ஓரிரு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தேவையின்றி பேசுவதை தவிர்த்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும். மார்ச் மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக தயாராகிவிடும் என்றார்.

மேலும், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்புக்கு 90% ஆதரவு அளித்துள்ளதாகவும், பயணிகள் சிரமமின்றி பயணிக்க தேவையான நடவடிக்கைகளை போக்குவரத்து துறை எடுத்து வருகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.