Menstruation : பெண்களின் கவனத்திற்கு..! இந்த பழக்கங்கள் மாதவிடாயின் போது வலியை அதிகரிக்க செய்யுமாம்..!

பெண்களை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வலியை அனுபவிக்கின்றனர். மாதவிடாய் காலகட்டத்தில் பெண்கள் அந்த 3 நாட்களில், உடலளவிலும், மனதளவிலும் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள பெண்களுக்கு உடலளவில் ஆரோக்கியமும், மனதளவில் தைரியமும் வேண்டும். தற்போது இந்த பதிவில் மாதவிடாயின் போது பெண்களுக்கு வயிற்றுவலி அதிகரிக்க என்ன காரணம் என்று பார்ப்போம்.

உணவுமுறை 

ஒருநாளைக்கு கண்டிப்பாக நாம் 3 வேலை உணவருந்த வேண்டும். நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் தான் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஒன்றாகும். அதிகமாக கடைகளில் விற்க கூடிய பாஸ்ட்புட் உணவுகளை தவிர்த்து, வீட்டிலேயே செய்யக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்.

பழங்கள், காய்கறிகள், தானிய வகைகள், மீன், முட்டை, இறைச்சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலை வலிமையாக்குவதுடன், மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய வயிற்றுவலியை தாங்கி கொள்ள வலிமையை கொடுக்கிறது.

கஃபின் கலந்த பானங்கள் 

காபி, தேநீர், கோகோ போன்ற பானங்களில் கஃபின் உள்ளது. பொதுவாக இந்த பானங்களை குடிக்கும் போது, இது தலைவலி, பதட்டம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதிலும், இதனை மாதவிடாய் சமயங்களில் குடிக்கும் போது, வயிற்றுவலியை அதிகரிக்க செய்கிறது. அதிகமாக தண்ணீர் குடிப்பது அவசியம்.

மன அழுத்தம் 

மனஅழுத்தம் பிரச்னை பொதுவாக பெரும்பாலானவர்களுக்கு காணப்படுகிறது. வேலை, குடும்பம் என அவர்கள் சார்ந்திருக்கும் சூழலை பொறுத்து இந்த பிரச்னை ஏற்படுகிறது. எனவே பெண்கள் மாதவிடாய் சமயங்களில் மனதை அமைதலாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அதிகப்படியான மனஅழுத்தமும் உங்களுக்கு வயிற்றுவலியை அதிகரிக்க செய்யும்.

தூக்கமின்மை 

சாதாரணமாகவே ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது மிகவும் அவசியமானது. தூக்கம் குறைவுபடும் போது, நமது உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். அதிலும், மாதவிடாய் சமயங்களில் ஒழுங்கான தூக்கம் இல்லை என்றால், அது ஹார்மோன் சமநிலையை பாதித்து வலியை அதிகரிக்க செய்யும்.

மாதவிடாய் சமயங்களில், அதிகப்படியான சோடியம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. பதப்படுத்தப்பட்ட உணவுகள் பொதுவாக அதிகப்படியான சோடியம் மற்றும் கொழுப்புகளை கொண்டுள்ளது. உறைந்த உணவுகளிலும் அதிகப்படியான கொழுப்புகள் காணப்படுகிறது. இது கருப்பையில் அழுத்தத்தை ஏற்படுத்தி வலியை அதிகரிக்க செய்கிறது.