தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக நிலை நிறுத்துவதே குறிக்கோள் : முதல்வர் சூளுரை.!

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி தொடக்க விழாவை சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுடர் ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் தமிழ்நாட்டு முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர், எல்.முருகன், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு முன்மாதிரியாக உள்ளது- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

விழாவில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், “திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க உழைத்து வருகிறோம், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு செஸ் ஒலிம்பியாட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தியுள்ளோம். மணிப்பூர் பிரச்னையால் அங்குள்ள விளையாட்டு வீரர்களை சகோதர உணர்வோடு அழைத்து இங்கு பயிற்சி கொடுத்தோம்.

அவர்களில் சிலர் இந்த கேலோ இந்தியா தொடரில் பங்கேற்கின்றனர் என்பது மகிழ்ச்சி. விளையாட்டிற்கு சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் ஆற்றல் உண்டு, விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டை மாற்றுவதே இலக்கு” என கூறினார். முன்னதாக சென்னை நேரு விளையாட்டரங்கில் பிரதமர் மோடியை வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உளி ஓவியங்கள்’ புத்தகத்தை அவருக்கு பரிசாக வழங்கினார்.