ஓரின சேர்க்கை திருமணங்களை அங்கீகரிப்பது உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் விட்டுவிடுங்கள் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆண் – பெண் இடையிலான திருமணங்கள் மட்டுமே அங்கீகரிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்ப சட்டம் இருப்பதாகவும், இதனால், ஓரினைசேர்க்கையாளர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், இது அவர்களின் கண்ணியம் மற்றும் தனியுரிமையின் அடிப்படை உரிமையை மீறுவதாகவும் உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் பதியப்பட்டு மேற்கண்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இரண்டாம் பிரமாண பத்திரம் :
இந்த வழக்கு நாளை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதி அமர்வு முன் விசாரிக்கப்பட உள்ளது. இதில், ஏற்கனவே மத்திய அரசு சார்பில் ஒரு விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இதனை தொடர்ந்து இன்று இரண்டாம் பிரமாண பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்திற்கு ஓர் கோரிக்கையை முன் வைத்துள்ளது.
நீதிமன்றம் தவிர்க்க வேண்டும் :
இரண்டாம் விளக்க அறிக்கையில், திருமணம் என்பது, ஆண் மற்றும் பெண் சம்பந்தப்பட்ட நிகழ்வு அல்ல. அது ஒரு பன்முகத்தன்மை கொண்ட நிகழ்வு. திருமணத்தை அங்கீகரிப்பது ஒரு சட்டமன்ற செயல்பாடு, இந்த விஷயத்தில் நீதிமன்றங்கள் முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசு விளக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மக்களின் கருத்துக்கள் :
சட்டமன்றத்தில், அனைத்து கிராமப்புற, அரை கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் பல்வேறு கருத்துகளையும், வாதங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், திருமண பழக்கவழக்கங்கள், மதப்பிரிவுகளின் கருத்துக்கள் ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளபட வேண்டும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
திருமணத்தில் பாரபட்சம் :
ஏற்கனவே கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட முதல் விளக்க அறிக்கையில், ஒரே பாலினத்தவர்கள் ஒன்றாக வாழ்வது மற்றும் உடலுறவு கொள்வது என்பதை, ஆண் மற்றும் பெண்ணை உள்ளடக்கிய இந்திய திருமணங்கள் உடன் ஒப்பிட முடியாது என வலியுறுத்தி இருந்த்து. ஓரினச்சேர்க்கை திருமணங்களை மத்திய அரசு அங்கீகரிக்காதது என்பது திருமணத்தில் பாரபட்சம் பார்க்கப்படுகிறது என்பதாக கருதப்படாது என்றும் மத்திய அரசு விளக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குழந்தை தத்தெடுப்பு :
இதே போன்ற மனுவில், ஒரே பாலின தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுக்க உரிமை கோரி இருந்தது. இதனால், தத்தெடுப்பு விதிகளில் மாற்றம் கோரி மனுக்களை தாக்கல் செய்து இருந்தது. இதனை, மத்திய அரசு மற்றும் குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையமும் எதிர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.