KodanadCase: எடப்பாடிக்கு வந்த சிக்கல்! கோடநாடு வழக்கில் கனகராஜ் சகோதரர் செப்.17ல் ஆஜராக சம்மன்!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக செப்.17ம் தேதி கனகராஜ் சகோதரர் தனபால் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு பரபரப்பான குற்றசாட்டுகளை முன்வைத்து வரும் தனபாலுக்கு சமமன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி காவலாளி ஒருவர் 11 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த முக்கிய ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த கும்பலில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் அதே ஏப்ரல் மாதம் விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு வழக்கில் இதுவரை சுமார் 230 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை கடந்த 5 வருடங்களாக உதகை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து நடந்த உயிரிழப்புகள், கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதுவும், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சூடுபிடித்தது. இதனிடையே,  இந்த வழக்கில் ஆதாரங்களை அழித்ததாக, உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த கனகராஜின் சகோதரர் தனபால், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு பரபரப்பான தகவல்களையும் தெரிவித்தார். அதாவது, கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும். அவர் சொல்லித்தான் எனது சகோதரர் கனகராஜ் சில விஷயங்களை செய்தார். எனது சகோதரர் கனகராஜ் விபத்தில் உயிரிழக்கவில்லை, கொலை செய்யப்பட்டார் என பல்வேறு திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். இதில், குறிப்பாக எடப்பாடி பழனிசாமி குறித்து பகிரங்கமான குற்றசாட்டைகளை முன்வைத்தார்.

அதுமட்டுமில்லாமல், எனது உயிருக்கு ஆபத்து உள்ளது, என்னால் தனியாக நடமாட முடியவில்லை, கோடநாடு சம்பவம் குறித்து வெளிய சொல்ல கூடாது என்று என்னை மிரட்டுகிறார்கள் எனவும் கூறியிருந்தார். சிபிசிஐடி என்னை விசாரணைக்கு அழைக்கும்போது எனக்கு தெரிந்த அனைத்து உண்மைகளையும் கூறிவிடுவேன் எனவும் கனகராஜ் சகோதரர் கூறினார். இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக செப்.17ம் தேதி கனகராஜ் சகோதரர் தனபால் நேரில் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

அதன்படி, கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் செப்.17ஆம் தேதி தனபால் நேரில் ஆஜராகுமாரும் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கோடநாடு சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக தனபால் கூறி வரும் நிலையில், அவரிடம் விசாரணை நடத்த உள்ளது சிபிசிஐடி. இந்த விசாரணைக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி சிக்கலில் சிக்குவாரா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கோடநாடு கொலை, கொள்ளை  தொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. உதகை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வாளையார் மனோஜ், ஜம்சிர் அலி உள்ளிட்டோர் ஆஜரான நிலையில், வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை நடத்தப்பட்ட மேல் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அவகாசம் வழங்கியது. மேல் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய செப்.21ம் தேதி வரை அவகாசம் வழங்கி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார்.