கேரளா ரயிலில் தீ விபத்து – நொய்டா விரைந்த புலனாய்வு குழு அதிகாரிகள்

கேரளா ரயில் தீ விபத்தில் சந்தேகிக்கும் நபர் பற்றிய விவரங்களை சேகரிப்பதற்காக புலனாய்வு குழு அதிகாரிகள் நொய்டா விரைந்துள்ளனர்.

கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே, இரவு 10 மணியளவில் ஆலப்புழா-கண்ணூர் மெயின் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் டி1 பெட்டியில் ஓடும் ரயிலில், ஒருவர் சகபயணி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

தீ பற்றி எரிவதை பார்த்த சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்த செய்தனர். அதற்குள் பயத்தில், ரயிலில் இருந்து குதித்த குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இருவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்ட நிலையில், குற்றவாளியின் மாதிரி வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

நொய்டா விரைந்த புலனாய்வு குழு 

இந்த நிலையில், கேரளா ரயில் தீ விபத்தில் சந்தேகிக்கும் நபர் பற்றிய விவரங்களை சேகரிப்பதற்காக புலனாய்வு குழு அதிகாரிகள் நொய்டா விரைந்துள்ளனர். கோழிக்கோட்டில் இருந்து புலனாய்வு அதிகாரிகள் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு விரைந்துள்ள நிலையில், இந்த சம்பவம் பயங்கரவாத சதியா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்கின்றனர்.

Leave a Comment