கேரளா படகு விபத்து… பலி எண்ணிக்கை தொடர் உயர்வு… மீட்பு பணிக்கு ஹெலிகாப்டர் வரவழைப்பு.!

கேரளா படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆகவும், மீட்புப்பணிக்கு ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி பகுதி தூவல்தீரம் கடற்கரை அருகே சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த படகு விபத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தற்போது வரை 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் கூட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு உதவ தற்போது ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மருத்துவமனைகளின் தகவல்களின் அடிப்படையில் நீரிலிருந்தும் படகிலிருந்தும் வெளியே எடுகப்பட்டவர்களில் 20 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் 4 பேர் கோட்டக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹ்மான் தெரிவித்தார்.

படகு கரைக்கு இழுத்துச் செல்லப்பட்டு வருகிறது, இதனால் இன்னும் சில உடல்கள் மீட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்று அவர் மேலும் கூறினார். கேரள படகு விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, வேதனை அடைந்ததாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.