29 C
Chennai
Wednesday, June 7, 2023

தமிழில் மட்டும் 2 பேர்…12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சதமடித்தவர்கள் பட்டியல் இதோ…!!

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்த நிலையில், இந்த தேர்வினை 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதினர். இதனையடுத்து, இந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 94.03% பேர் தேர்ச்சி எனவும், அதில் மாணவிகளில் 96.38% பேரும், மாணவர்களில் 91.45% பேரும் தேர்ச்சி என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், முக்கியப் பாடங்களில் 100 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை பற்றிய விவரம் தற்போது வெளியிடபட்டுள்ளது. அதன்படி, தமிழ் தேர்வில் 2 பேர் , ஆங்கிலத்தில் 15 பேர், இயற்பியல் 812 பேர், வேதியியல் 3,909, உயிரியல் 1,494 பேர், கணிதம் 690 பேர், தாவரவியல் 340 பேர், விலங்கியல் 154 பேர், கணினி அறிவியல் 4,618 பேர், வணிகவியல் 5,678 பேர், கணக்குப் பதிவியல் 6,573 பேர்,பொருளியல் 1,760 பேர், கணினிப் பயன்பாடுகள் 4,051 பேர் வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 1,334 என  மொத்தமாக 32,501  மாணவ, மாணவியர்கள்  100 சதவிகிதம் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்து கொள்ளலாம்..? 

மாணவ, மாணவியர்கள் தங்கள் தேர்வு முடிவினை tnresults.nic.in , dge.tn.nic.in , என்ற இணைய தளங்களில் தெரிந்துகொள்ளலாம். இணையத்தளத்தில் சென்று மாணவர்கள் அவர்களின் பிறந்த தேதி, பதிவெண் ஆகியவற்றை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறியலாம்.

மேலும், இந்த மதிப்பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பிரதான அரசு நூலகங்கள், மாணவர்கள் பயின்ற பள்ளிகள் ஆகிய இடங்களில் சென்றும் தெரிந்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.