கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் – வேட்புமனுவைத் திரும்பப் பெற இன்று கடைசிநாள்!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வேட்புமனுவைத் திரும்பப் பெற இன்று கடைசி நாளாகும்.

மொத்தம் 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் கடந்த 13ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கடந்த 21ம் தேதி நிறைவு பெற்றது. இதில், சட்டப்பேரவை தேர்தலுக்காக 3,632 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்புமனு மீதான பரிசீலினை கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இதில் 678 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 3 ஆயிரத்து 44 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வேட்புமனுவைத் திரும்பப் பெற இன்று கடைசி நாளாகும்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால் இன்று ஒரு நாள் மட்டுமே மனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் உள்ளது. மே 13ம் தேதி பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.