சனிபகவானின் பிடியில் உள்ளவர்கள் செல்ல வேண்டிய காலபைரவர் ஆலயம்..!

பொதுவாக கோவில்கள் என்றாலே கோபுரம் தான் பெரிதாக இருக்கும். ஆனால் இங்குள்ள கால பைரவரின் சிலையே கோபுரமாக காட்சியளிக்கிறது. உலகிலேயே மிக உயரமான இந்த  காலபைரவர் ஆலயம் அமைந்துள்ள இடம்  மற்றும் அதன் சிறப்புகள், பரிகாரங்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

காலபைரவர் கோவில் அமைந்துள்ள இடம்:

ஈரோடு மாவட்டம் காங்கேயம் செல்லும் வழியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அவல்பூந்துறை என்ற ஊரில் இருந்து நாலு கிலோ மீட்டர் தொலைவில் ராட்டைசுற்றிபாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது.பழனி செல்லும் பேருந்திலும் செல்லலாம் .காலை 8-இரவு 8மணி வரை நடை திறந்திருக்கும்.

ஆலயத்தின் சிறப்புகள்:

இங்குள்ள கால பைரவர் உலகிலேயே மிக உயரமான காலபைரவர் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. 34 அடி பீடத்தில் 39 அடி உயரத்தில் காலபைரவர் காட்சியளிக்கிறார். இங்குள்ள மூலவர் சொர்ணாகர்சன அவதாரமாக  மனைவியுடன் கையில் அட்சயப் பாத்திரத்துடனும் காணப்படுகிறார்.

இங்குள்ள சொர்ண லிங்கம்  இமயமலையிலிருந்து கொண்டுவரப்பட்டதாகும். சிவலிங்கத்திற்கு 108 ஒரு ரூபாய் நாணயங்களால் ஸ்வர்ணாலய அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த நாணயங்களை தொழில் செய்பவர்கள் வாங்கிச் சென்றால்  செல்வ செழிப்போடு வாழலாம் என நம்பப்படுகிறது.

இங்கு கொடுக்கப்படும் பச்சை நிற விபூதி கண் திருஷ்டியை போக்கும் எனவும் கூறப்படுகிறது. ஆலயத்தை சுற்றி 64 வடிவத்தில் பைரவர் சிலை பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆலயம் தென்னக காசி  எனவும் அழைக்கப்படுகிறது, ஏனென்றால் காசியில் இருப்பது போல பின்புறத்தில் சுடுகாடும் அருகாமையில் நீரோடையும் ஓடிக்கொண்டே இருக்கிறது. இங்கு கருவறைக்குள் பெண்களே அபிஷேகம் செய்யலாம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

பரிகாரங்கள் மற்றும் பலன்கள்:

பைரவருக்கு பூசணிக்காய் தீபம், தேங்காய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம். இவ்வாறு வழிபாடு செய்து வந்தால் ராகு கேது தோஷம் ,கால சர்ப்ப தோஷம், எம பயம் போன்றவையும் சனி பகவானின் பிடியில் இருப்பவர்கள் இங்கு ஒரு முறை சென்று வந்தால் அதன் தாக்கம் குறையும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பில்லி சூனியத்தால் தொழில் முடக்கம் ஏற்பட்டவர்களும் இங்கு சென்று வரலாம். தேய்பிறை அஷ்டமி, அம்மாவாசை, பௌர்ணமி போன்ற தினங்களில்  இங்கு சென்று வழிபடுவது மிகச் சிறப்பாகும்.

பொதுவாக இக்கட்டான சூழ்நிலையில் நாம் இருந்தோமேயானால்  பைரவரை வழிபட்டால் அந்தச் சூழல் அகலும் என்ற சிறப்பும் பைரவருக்கு உண்டு.ஆகவே தொழில் தொடங்க நினைப்பவர்கள் இங்கு வந்து வழிபட்டு பிறகு தொடங்கினால் தொழில் நல்ல விருத்தி அடையும். ஏனென்றால் இங்குள்ள பைரவர் அட்சய பாத்திரத்துடன் இருப்பதால் அவ்வாறு கூறப்படுகிறது.

Leave a Comment