ஜூன் 20ம் தேதியை உலக துரோகிகள் தினமாக அறிவிக்க வேண்டும்..! யுபிடி தலைவர் சஞ்சய் ராவத்

ஜூன் 20ம் தேதியை உலக துரோகிகள் தினமாக அறிவிக்க வேண்டும் என யுபிடி தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத், ஜூன் 20ம் தேதியை உலக துரோகிகள் தினமாக அனுசரிக்கக் கோரி ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸுக்கு கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உட்பட சிவசேனாவைச் சேர்ந்த 40 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஒரு பெரிய குழு ஜூன் 20ம் தேதி ராஜினாமா செய்தது. இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் 50 கோடி ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது.

உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசைக் கவிழ்க்க பாஜக தனது செல்வாக்கையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி இதைத் திட்டமிட்டது என்றும் உத்தவ் தாக்கரே உடல்நலப் பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நேரத்தில் இவ்வாறு நிகழ்ந்ததாகவும் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

எனவே, ஜூன் 21ம் தேதி உலக யோகா தினமாக அனுசரிக்கப்படுவது போல் ஜூன் 20ம் தேதியை உலக துரோகிகள் தினமாக ஆக்க வேண்டும் என்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். துரோகிகளை உலகம் நினைவு கூரும் வகையில் இதைச் செய்ய வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.