தமிழ் கல்வெட்டுக்கு திராவிட அடையாளமா? – நீதிமன்றம் கேள்வி

தமிழ் கல்வெட்டுக்கு திராவிட அடையாளமா? என்று உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் கீழடி ,கொந்தகை,ஆதிச்சநல்லூர்,கொடுமணல்,தாமிரபரணி ஆற்றுப்படுகை உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும்,மதுரையில் சமணர் படுகைகள் உள்ளிட்ட பழங்கால அடியாளங்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்றும் எழுத்தாளர் முத்தாலங் குறிச்சி காமராஜ்,புஷ்பவனம் ,ஆனந்த ராஜ் உள்ளிட்ட பலர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன்,துரைசாமி ஆகியோரின் தலைமையிலான அமர்வு ,இதுதொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நடைமுறைப்படுத்தபட்டதா? என்று விளக்கம் கேட்கையில்,முழு விபரங்களையும் தாக்கல் செய்ய தமிழக அரசு சிறிது கால அவகாசம் வேண்டும் என்று கூறியது.ஆனால்,மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டதாகவும்,அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது.

அதற்கு நீதிபதிகள் “கல்வெட்டியல் துறையில் போதுமான நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனாரா? என்று கேள்வி எழுப்பினர்.மேலும்,மத்திய அரசு கல்வெட்டியல் துறையை மூடுவதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாக தெரிகிறது,இதுவரை இந்தியாவில் கிடைத்த 1 லட்சம் கல்வெட்டுக்களில்,6000 ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழுக்கானவையாக இருக்கையில்,அவற்றை மைசூரில் வைத்து ஏன் பாதுகாக்க வேண்டும்.கர்நாடக அரசுக்கும்,தமிழக அரசுக்கும் காவிரி நீர் பிரச்சனை உள்ள நிலையில்,தமிழகத்திலேயே கல்வெட்டுக்களை வைத்து பாதுகாக்கலாமே” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு 1980 ஆம் ஆண்டிலேயே சென்னையில் தமிழ் கல்வெட்டியல் துறைக்கான கிளை அமைக்கப்பட்டு, அதன்படி நியமிக்கப்பட்ட நான்கு தமிழ் கல்வெட்டு ஆய்வாளர்களில்  2பேர் சென்னையிலும்,2பேர் மைசூரிலும் உள்ளனர் என்று தெரிவித்தது.

மேலும்,நீதிபதிகள் சென்னையில் சமஸ்கிருதத்திற்கென ஆய்வாளர் உள்ளாரா?,எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கேட்டனர். அதற்கு,மத்திய அரசு ஒரு ஆய்வாளர் பணியமர்த்தப்பட்டுள்ளார் என்று தெரிவித்தது.

இதனையடுத்து நீதிபதிகள்,”இந்தியாவில் கிடைத்த 1 லட்சம் கல்வெட்டுக்களில்,6000 ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழுக்கானவை.அவ்வாறு இருக்க தமிழகத்தில் சமஸ்கிருதத்திற்கென ஆய்வாளரை நியமிக்க தேவை என்ன?,அதனை திராவிட மொழிக்கான கல்வெட்டுக்கள் என அடையாளப்படுத்துவது ஏன்?”,என்றும் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

உடனே மத்திய அரசு ,அது அரசின் கொள்கை முடிவு என்று கூறியதையடுத்து,நீதிபதிகள் அரசின் கொள்கை முடிவாக இருந்தாலும்,ஒன்றன் அடையாளத்தை மறைக்கும் வகையில் இருத்தல் கூடாது.மேலும்,அந்தந்த மொழியுடன் தொடர்புடைய கல்வெட்டுக்களின் முக்கியத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்”,என்று தெரிவித்துள்ளனர்.