அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் வீண் செலவு தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறையில் 2019-2021 வரை 57 கணினிகளை பயன்டுத்தி 80க்கும் மேற்பட்ட டெண்டர் போடப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் ஊழல் 

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியில் ஊழல் எப்படி தலைவிரித்து ஆடியது என்பதை சி.ஏ.ஜி தணிக்கை அறிக்கையில் விளக்கி உள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக அதிமுக ஆட்சியில் விளம்பரங்கள் வெளியிட்டதில் கூட ₹2.18 கோடி முறைகேடு நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களை அடையாளம் காண்பதில் பெரும் முறைகேடு ஏற்பட்டதால், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சமூகநீதியை பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சிதைத்துள்ளது. பழங்குடியினருக்கான 60% வீடுகள் பழங்குடி இன மக்களுக்கு சென்றடையவில்லை என சி.ஏ.ஜி ஆதங்கத்தை அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் தகுதியற்ற பயனாளிகளுக்கு 3,354 வீடுகள் முறைகேடாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சி.ஏ.ஜி அறிக்கையில் அம்பலம் ஆகியுள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டறை நவீன மயமாக்கும் திட்டத்தில் கடந்த அதிமுக அரசின் அலட்சியத்தால் காவல்துறைக்கு ₹14.37 கோடி வீண் செலவு ஏற்பட்டுள்ளது

சட்டம் ஒழுங்கை கட்டி காக்கும் காவல்துறையை நவீனப்படுத்துவதில் அக்கறை செலுத்தாமல் இருப்பதில் கவனமாக இருந்திருக்கிறது அதிமுக அரசு. அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதில் ரூ.68.58 கோடி முறைகேடு நடந்துள்ளது. அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்ட லேப்டாப் உரிய நேரத்தில் வழங்கப்படாததால் அதன் பேட்டரிகள் பழுதானது.

அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்காக வாங்கிய ரூ.3.40 லட்சம் காலனிகள் பயன்படுத்தாமல் வீணானது. அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் வீண் செலவு தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.