#IPL BREAKING: சென்னை அணி அசத்தல் பவுலிங்; KKR அணி படுதோல்வி.!

ஐபிஎல் தொடரின் இன்றைய KKR vs CSK போட்டியில் சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.

16-வது ஐபிஎல் தொடரின் இன்று இருபோட்டிகள் நடைபெறும் நிலையில், 7.30மணிக்கு தொடங்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, முதலில் சென்னை அணியை பேட் செய்ய அழைத்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது, கான்வே(56 ரன்கள்), ஷிவம் துபே(50 ரன்கள்) மற்றும் ரஹானே(71* ரன்கள்) அடிக்க சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி சார்பில், கெஜ்ரோலியா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

236 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில், ஆரம்பமே அதிர்ச்சியாக சுனில் நரைன்(0) மற்றும் ஜெகதீசன் (1) என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து கேப்டன் நிதிஷ் ராணா(27 ரன்கள்) மற்றும் வெங்கடேஷ் ஐயர்(20 ரன்கள்) என நிலைத்து நிற்காமல் விக்கெட்டை பறிகொடுக்க, அதன்பின் ஜேசன் ராய் மற்றும் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

அதிரடியாக விளையாடி சிக்ஸர்களை பறக்கவிட்ட ஜேசன் ராய் 61 ரன்களுக்கு(27 பந்துகள்) ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரசலும் பெரிதாக சோபிக்க தவறினார், ரசல் 9 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். மறுபுறம் தொடர்ந்து சிக்ஸர்கள் அடித்து அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங்(53* ரன்கள்) இறுதிவரை போராடினார்.

முடிவில் கொல்கத்தா அணி 186 ரன்கள் மட்டும் அடிக்க, சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் தேஷ்பாண்டே, தீக்ஷனா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

Leave a Comment