மூன்றாவது நாளாக சரிந்த இந்திய பங்குச்சந்தை..! சென்செக்ஸ் 62,452 புள்ளிகளாக வர்த்தகம்..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 517.13 புள்ளிகள் சரிந்து 62,452 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,500 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

கடந்த 2 நாட்களாக சரிவில் வர்த்தகமாகிவந்த இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் 3வது நாளான இன்றும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நாளில் 62,839 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் காலை 11 மணி நிலவரப்படி, 338.72 புள்ளிகள் சரிந்து 62,630 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.

ஆனால், தற்பொழுது சென்செக்ஸ் 517.13 புள்ளிகள் அல்லது 0.82% என சரிந்து 62,452 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 132.90 புள்ளிகள் அல்லது 0.71% சரிந்து 18,500 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 62,969 புள்ளிகளாகவும், நிஃப்டி 18,633 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடி முதலீடு செய்துள்ளனர்.

ஏசியன் பெயிண்ட்ஸ், டெக் மஹிந்திரா, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. என்டிபிசி லிமிடெட், ஆக்சிஸ் வங்கி, வீட்டு வசதி மேம்பாட்டு நிதிக் கழகம், பாரத ஸ்டேட் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன