இசைஞானி என்ற கர்வத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டேன் – இசையமைப்பாளர் இளையராஜா பேச்சு!

சென்னையில்  புத்தக கண்காட்சி நேற்று முன்தினம் (ஜனவரி 3) முதல் தொடங்கியது. இதில் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என கலந்துகொண்டு வருகிறார்கள்.  அந்த வகையில், நேற்று நடந்த புத்தகக்காட்சியில் இசையமைப்பாளர் இளையராஜா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் இளையராஜா பல விஷயங்களை பேசியுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா ” நான் என்னுடைய முதல் படத்திலேயே ஆண்டாள் பாடிய பாடலை இடம்பெறச் செய்த பாக்கியம் எனக்கு கிடைத்தது.

நான் மிகப்பெரிய சிவபக்தன் நான் இவற்றிற்கு எல்லாம் எதிரி அல்ல. திவ்யபிரபந்தத்தை ஒலிப்பதிவு செய்து நான் வைத்து இருக்கிறேன்.  அதனை எப்போது வெளியிடவேண்டுமோ அப்போது சரியான நேரம் வரும்போது வெளியிடுவேன்.  இப்போதெல்லாம் ஒரு படத்தில் இருந்து பாடல்கள் இசையமைத்து வெளி வருகிறது என்றால் 6 மாதம் ஆகிறது.

ஒரு பாடலை இசையமைக்க இசையமைப்பாளர்கள் 1 வருடம் வரை நேரம்  எடுத்துக்கொள்கிறார்கள். அதற்காக அவர்களை நான் குறை சொல்கிறேன் என்று நினைத்து விடாதீர்கள். அவர்களுக்கு வேகமாக இசையமைக்க வரவில்லை, அதே சமயம் இதில் சிலரும் சாதனை படைத்தவர்களும் உண்டு.  நான் ஒரு நேரத்தில் தீபாவளிக்கு 3 படங்களுக்குப் பின்னணி இசை அமைத்துள்ளேன். உலகத்திலேயே 3 நாளில் 3 படங்களுக்கு இசை அமைத்தது நானாக தான் இருக்கும்.

மீண்டும் பழைய பார்முலாவை கையில் எடுக்கும் நயன்தாரா?

இசையமைத்தது மட்டுமில்லை. ஒரே நேரத்தில் நான் 10 பாடல்களை எழுதி முடித்தேன். அடுத்த நாள் 10 பாடல்கள் எழுதினேன்.  ஒரு முறை நான் திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபிறகு, ’பரம்பொருளே’ என்ற பாடலை எழுதத் தொடங்கினேன். பிறகு இந்த விஷயத்தை தமிழ் எழுத்தாளர் நமச்சிவாயத்திடமும் சொன்னேன். அவர் திருப்பள்ளி எழுச்சியும் எழுதச் சொன்னார். அதிலும் 10 பாடல்கள் எழுதி வைத்திருக்கிறேன்

இசைஞானி என்ற பட்டத்திற்கு தகுதியானவனா நான் என்பது தெரியவில்லை. முறையான சங்கீத ஞானம் இல்லாதவன் நான். மக்கள் என்னை ’இசைஞானி’ என அழைக்கிறார்கள் அதற்காக நான் இப்போது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஆனால், நான் அந்த கர்வத்தில் இருந்து நான் எப்போதே விடுபட்டுவிட்டேன். புகழ்மொழியும் என்னை ஒன்றும் செய்யாது” எனவும் இளையராஜா தெரிவித்துள்ளார்.