திரு லோகேஷ் என கூற மாட்டேன்., அடம்பிடித்த ஆண்டவர்.! நெகிழ்ந்து போன லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் ராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.

படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், கமல்ஹாசன் லோகேஷை பாராட்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தை லோகேஷ் கனகராஜ் ட்வீட்டர் பக்கத்தில் லைஃப் டைம் செட்டில் மென்ட் என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்.

அதில் ” திரு போடாமல் விட்டது விபத்தல்ல. திரு. கனகராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை உங்களைக் கேட்காமலேயே நான் எடுத்துக் கொண்டு விட்டேன். இது நமக்குள்ளான தனிப்பட்ட கடிதம் என்பதால் மற்றபடி உங்கள் சாதனைக்கான பதவிக்கான மரியாதை பழயபடியே தொடரும், பொது வெளியில்.

என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களை விட வித்தியாசமாக இருப்பது அவசியம் என்ற என் ஆசை பேராசை என்றனர் என் விமர்சகர்கள். ஆனால் அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர், முன்னணி திறமையாளராகவும் இருப்பதுதான் நான் ஆசைப்பட்டதை விட அதிகம்.

உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உள்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். யூடியூபை திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே தென்படும். அதில் உள்ள திரு. லோகேஷ் கனகராஜ், தோத்திர மாலையிலிருந்து யார் வேண்டுமானாலும் வார்த்தை மலர்களை எடுத்துக் கொள்ளலாம். இவையெல்லாம் தொடர வாழ்த்துக்கள்.

அயராது… விழித்திருங்கள், தனித்திருங்கள், பசித்திருங்கள். உங்கள் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும். உங்கள் நான்” என அந்த கடிதத்தில் கமல்ஹாசன் எழுதியுள்ளார்.

Leave a Comment