வெப்ப அலையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி.?

Heat Wave: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. முன்பு இதுவரை இல்லாத வகையில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதில் சில இடங்களில் இயல்பைவிட வெயிலின் அளவு உச்ச நிலையில் காணப்படுவதால் வெப்ப அலை வீசியும் வருகிறது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையமும் சில மாநிலங்களுக்கு வெப்ப அலைக்கான எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதன்படி, மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் அடுத்த சில நாட்கள் வெப்ப அலை வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெயிலால் முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இந்த சூழலில் வெப்ப அலையில் இருந்து நம்மை எவ்வாறு காத்துக்கொள்வது என்பது குறித்தும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வெயிலின் போது பின்பற்ற வேண்டியவை:

  • தண்ணீர் தாகம் இல்லாவிட்டாலும், உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க போதுமான தண்ணீர் அல்லது நீர்சத்தை அதிகரிக்கும் ORS என்ற உப்பு, சக்கரை கரைசலை குடிக்க வேண்டும்.
  • அதிக வெப்பம் உள்ள நேரங்களில் (12PM – 4PM) வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும், பணிகளை தகுந்தவாறு மாற்றியமைக்க வேண்டும்.
  • வெயிலில் அதிகமாக இருக்கும் சமயத்தில் நிழல் மற்றும் மூடப்பட்ட பகுதிகளில் நிற்பது அவசியமான ஒன்று.  இதனை குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பின்பற்ற வேண்டும்.
  • மேலும், வெயில் காலத்தில் லைட் கலர் காட்டன் ஆடைகளை அணிய வேண்டும் என்றும் தலையில் துணி, தொப்பி அல்லது குடையை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.