டெல்லியில் காற்று மாசு: நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்த நிலையில், காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக, டெல்லியில் காற்று மாசு காரணமாக நவம்பர் 11-ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது நாளை (9 ம் தேதி) முதல் 18ம் தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை என அம்மாநில அரசு  அறிவித்துள்ளது.

டெல்லியில் காற்று மாசு உச்சத்தை எட்டியதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்த நிலையில், மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி ஜனவரியில் வழங்கப்படும் குளிர்கால விடுமுறை, முன்கூட்டியே அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவு எண் அடிப்படையில் நவம்பர் 13 முதல் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டெல்லியில் காற்று மாசு தடுப்பு விதியை மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது. வாகன பயன்பாட்டை குறைக்க 50 சதவீத பணியாளர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.