நாட்டுக்காக தாலியை பறிகொடுத்தவர் தனது தாய்..பிரதமருக்கு பிரியங்கா காந்தி காட்டமான பதில்.!

Priyanka Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதில் கூறியுள்ளது.

கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 26ஆம் தேதி) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.

இதனிடையே வேட்பாளர்கள் புயலாய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்திய பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும். நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை அவர்களுக்கு கொடுக்க விரும்புகிறீர்களா? இதை நீங்கள் ஏற்பீர்களா? எனது தாய் மற்றும் சகோதரிகளின் தாலியை பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, எனது ‘என் தாயின் மாங்கல்யம் இந்த நாட்டுக்காக தியாகம் செய்யப்பட்டது, தாலியின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டிருந்தால் மோடி இப்படி பேசியிருக்க மாட்டார் என பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு காட்டமாக பதில் கூறியுள்ளது.

இது குறித்து அவர் விரிவாக பேசுகையில், உங்கள் தாலி மற்றும் தங்கத்தை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று பிரதமர் மோடி கூறுகிறார். போராட்டத்தின்போது உயிரிழந்த 600 விவசாயிகளின் மனைவிகளுடைய தாலி குறித்து பிரதமர் கவலைப்பட்டாரா?

மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலை பட்டாரா? பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் எனது சகோதரிகள் தங்களுடைய தாலியை அடமானம் வைக்க நேரிட்டபோது, பிரதமர் எங்கே இருந்தார்? நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகின்றன. 55 ஆண்டுகளில் யாருடைய தாலியையும் காங்கிரஸ் பறித்ததா?

நாடு போரில் ஈடுபட்ட போது, என் பாட்டி இந்திரா காந்தி தனது தாலி மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கினார். எனது தாயார் நாட்டுக்காக தாலியை தியாகம் செய்தார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.