ஹமாஸின் பயங்கரவாதக் குழுவின் தளபதி வேல் அசெபா கொல்லப்பட்டார்.! ஐடிஎஃப்

இஸ்ரேல் மற்றும் காசாவில் இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் இன்றுவரை கடுமையான போர் நடந்து வருகிறது. இந்த போர்த் தொடங்கி ஒரு மாதம் ஆனபோதிலும், இரு நாடுகளிடையே போரை நிறுத்துவதற்கான அறிகுறிகள் இல்லை.

இந்த போரினால் மக்கள் பாதிக்கப்படுவதால் பல உலக நாடுகள், இரண்டு தரப்பினரிடமும் போரை நிறுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இஸ்ரேல் போரை நிறுத்தாமல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து வான்வழித் தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல், தரைவழி தாக்குதலையும் தீவிரப்படுத்தி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கண்காணிப்பு நிலைகள், ஏவுகணை ஏவுதளங்கள் உட்பட 450 க்கும் மேற்பட்ட ஹமாஸ் இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் கூறியுள்ளது. அதோடு, ஹமாஸ் செயற்பாட்டாளர்களுக்கான பயிற்சிப் பகுதிகள் மற்றும் நிலத்தடி பயங்கரவாத சுரங்கங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஹமாஸ் இராணுவ வளாகத்தை இஸ்ரேல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸின் டெய்ர் அல்-பலாஹ் பட்டாலியனின் தளபதி வேல் அசெபா கொல்லப்பட்டுள்ளதாக, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (IDF) தெரிவித்துள்ளது. அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலிய பொதுமக்களைத் தாக்கவும், கடத்தவும் மற்றும் கொலை செய்யவும் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகளை அனுப்புவதற்கு அஸீஃபா உதவியதாகவும் தெரிவித்துள்ளது.

வேல் அசெபா 1992-1998ம் ஆண்டுக்கு இடையில் இஸ்ரேலிய சமூகங்களுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டதற்காக சிறையில் அடைக்கப்பட்டார் மற்றும் இஸ்ரேலிய குடிமக்களுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களை தூண்டுதல் மற்றும் ஊக்குவிப்பதில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.