Gaganyaan Mission: ககன்யான் திட்ட முதற்கட்ட சோதனை வெற்றி!

ககன்யான் திட்ட மாதிரி முதல்கட்ட சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகளை தொடர்ந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் டிவி-டி1 ராக்கெட் மூலம், தரையில் இருந்து 16.6 கி.மீ. தூரம் வரை அனுப்பி, மீண்டும் அதை பாராசூட் மூலம் வங்கக்கடலில் இறக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை வெறும் 20 நிமிடத்தில் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த சோதனை காலை 8 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மோசமான வானிலை, தொழில்நுட்ப கோளாறு காரணமாக 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இறுதியாக காலை 10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

ககன்யா திட்டத்தின் மாதிரி விண்கலம் சோதனை ஒத்திவைப்பு..!

விண்ணில், ஏவப்பட்ட 90 விநாடியில் ராக்கெட்டில் இருந்து பிரிந்தது ககன்யான் விண்கலன் என்பது குறிப்பிடத்தக்கது. கடற்படை கப்பல் மூலம் சோதனை கலன் பத்திரமாக மீட்கப்பட்டு இஸ்ரோ கொண்டுவரப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.