போராடும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கோரிக்கை.!

ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும்,  வேலைக்கேற்ற உரிய ஊதியம், வேலை நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் சென்னை, நுங்கம்பாக்கம் டிபிஐ அலுவலகத்தில் கடந்த 7 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தை அடுத்து நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கல்வித்துறை முக்கிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2,500 வரையில் தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்றும், ஊதிய முரண்பாடு குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து 3 மாதத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பை தொடர்ந்தும் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  இதனால் , இன்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை இன்று காவல்துறையினர் கைது செய்து சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம், சமூக நலகூடங்கள் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள் போராட்டம் மற்றும் அவர்களை கைது குறித்து தனது கண்டனங்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில்,  எதிர்கட்சியாக இருக்கும்பொழுது ஒரு பேச்சு, ஆளும் கட்சியான பிறகு மற்றொரு பேச்சு என முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்.

கடந்த 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது திமுக வெளியிட்ட 311-வது மற்றும் 181 ஆம் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கடந்த 9 நாட்களாக அமைதியான முறையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் மற்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.

அவர்கள் போராட்டத்தில் முன் வைக்கும்  311 மற்றும் 181வது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை கைதுசெய்ததையும், அவர்களை ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதையும் , வன்மையாக கண்டிக்கிறேன்.  முதல்வர் ஸ்டாலின் அவர்களே, கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், ஆசிரியர்களுக்கு தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்துகிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.