கிரிக்கெட் ரசிகர்களுக்கு நாளை இலவசம் பயணம் ..!

சேப்பாக்கத்தில் நாளை நடக்கும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான போட்டியை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்கள் மெட்ரோ இரயிலில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்.

இந்த ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் உலகக்கோப்பைத் தொடரின் 5 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. சென்னையில் நடைபெறும் இந்த போட்டிகளை காண பல பகுதிகளில் இருந்து ரசிகர்கள் வருவார்கள் என்பதால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் அனைத்து  நாட்களிலும் சிந்தாரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, போட்டியினை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக, மெட்ரோ இரயில் சேவை வழக்கத்தை விட கூடுதலாக ஒரு மணி நேரம், அதாவது, இரவு 12.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரசிகர்கள், போட்டிக்கான டிக்கெட்டினை காண்பித்து எவ்வித கட்டணமும் இன்றி மெட்ரோ இரயிலில் பயணம் மேற்கொள்ளலாம். போட்டியை காண மைதானத்திற்கு செல்லும் போது இச்சலுகை பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.