‘என்றென்றும் அதிமுகக்காரன்’ – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ்.பி.வேலுமணி..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் பாஜகவில் இருந்து அதிமுக விலகியதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில், கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக கூட்டணி வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக தொடர வேண்டும் என்று பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, பாஜகவில் இருந்து அதிமுக விலகுவதாக அதிமுக அறிக்கை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது என அதிமுக அறிக்கை வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை அதிமுக எதிராக பாஜக பயன்படுத்துவதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மிதிவண்டியில் பேரணி செல்லும் புகைப்பதை வெளியிட்டு, என்றென்றும் அதிமுகக்காரன் என டேக் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பதிவிட்டு தற்போது சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் எஸ்.பி.வேலுமணி.