இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழக வளாகங்கள்… விதிமுறைகளை வெளியிட்ட யுஜிசி!

இந்தியாவில் வளாகங்களை வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அமைக்க அனுமதிக்கும் வரைவு விதிமுறைகளை UGC வெளியிட்டது.

இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களை வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வளாகங்கள் அமைப்பது மற்றும் செயல்படுத்துவதற்கான வரைவு வழிகாட்டி நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகம் அமைக்க பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதி பெற வேண்டும் என்று யுஜிசி தலைவர் எம். ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதற்கான வரைவு விதிமுறைகளை UGC வெளியிட்டது. அதில், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கிளை தொடங்க பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி கோரினாலும் முதல் 10 ஆண்டுகளுக்கு மட்டும் அனுமதி தரப்படும். முழுநேரமாக, மாணவர்களுக்கு நேரில் வகுப்புகளை நடத்துவதாக இருந்தால் மட்டுமே வளாகம் அமைக்க அனுமதி தரப்படும்.

ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தும் பட்சத்தில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு வளாகம் அமைக்க அனுமதி தரப்படாது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாக மாணவர் சேர்க்கை நடத்தலாம், கட்டணத்தை முடிவு செய்யலாம், அதில் தடை இல்லை. வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வழங்கும் கல்வியின் தரம், இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இணையாக இருப்பது உறுதி செய்யப்படும்.

வளாகம் அமைக்க வழங்கப்படும் நிதியுதவி போன்றவை, மத்திய அரசின் அந்நிய செலாவணி பரிமாற்றச் சட்டத்துக்கு உட்பட்டதாகும். அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டபின் இந்த மாத இறுதியில் இறுதியான விதிமுறைகள் வெளியிடப்படும். சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் 9வது ஆண்டில் புதுப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல் 500 உலகளாவிய தரவரிசையில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டுப் பல்கலைக்கழகம், புகழ்பெற்ற வெளிநாட்டுக் கல்வி நிறுவனம் இந்தியாவில் வளாகத்தை அமைக்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பமானது UGC-ஆல் நியமிக்கப்பட்ட ஒரு நிலைக்குழுவால் பரிசீலிக்கப்படும். அதன்பிறகு, 45 நாட்களுக்குள் அனுமதி வழங்கி, இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தியாவில் வளாகங்களை அமைக்க வெளிநாட்டு நிறுவனத்திற்கு UGC கொள்கை ரீதியான அனுமதியை வழங்கலாம்.

இதனால் புதிய தேசிய கல்விக் கொள்கை, 2020, உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் செயல்படுவதற்கு வசதியாக இருக்கும். பல்கலைக்கழகங்களுக்கு இந்தியாவின் பிற தன்னாட்சி நிறுவனங்களுக்கு இணையாக ஒழுங்குமுறை, நிர்வாகம் மற்றும் உள்ளடக்க விதிமுறைகள் குறித்து சிறப்பு விதிமுறைகள் வழங்கப்படும் எனவும் யுஜிசி வெளியிட்டுள்ளார் விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment