2014க்குப் பிறகு முதல் மரணம்..! பறவைக் காய்ச்சலுக்கு பலியான 11 வயது சிறுமி..!

கம்போடியாவில் 11 வயது சிறுமி ஒருவர் பறவைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கம்போடியாவில் 11 வயது சிறுமி ஒருவர் பறவைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும் 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் மனிதன் H5N1 வைரஸ்  தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பறவைக் காய்ச்சல் :

பறவைக்காய்ச்சல் என்று அழைக்கப்படும் இந்த தொற்று பொதுவாக கோழிப்பண்ணையில் பரவுகிறது. உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மனிதர்கள் பாதிக்கப்பட்ட கோழிகளுடன் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ளனர். இதனால் பாலூட்டிகளில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் மக்களிடையே எளிதில் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது.

Bird flu kills 1

சிறுமி பலி :

இந்நிலையில் ப்ரே வெங் மாகாணத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி பிப்ரவரி 16 அன்று உடல்நிலை சரியில்லாமல், தலைநகர் புனோம் பென்னில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் இருமல் மற்றும் தொண்டை வலியுடன் 39 செல்சியஸ் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக அவர் இறந்துவிட்டார். இதையடுத்து சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு பாதுகாப்புப் பகுதியில் இறந்த காட்டுப் பறவையின் மாதிரிகளை சுகாதார அதிகாரிகள் எடுத்துள்ளனர்.

Bird flu kills

சுகாதார அமைச்சர் எச்சரிக்கை :

கம்போடிய சுகாதார அமைச்சர் மாம் புன்ஹெங், பறவைக் காய்ச்சல், வீட்டில் அல்லது சந்தைகளில் வளர்க்கப்படும் கோழிகளில் இருந்து வரும் முட்டைகளை உண்பதாலும், பறவைகளுடன் விளையாடும் அல்லது அவற்றின் கூண்டுகளை சுத்தம் செய்யும் போதும் குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று எச்சரித்தார்.

Bird flu

பறவைக்காய்ச்சல் அறிகுறிகள் : 

பறவைக்காய்ச்சல் எனப்படும் H5N1 வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் இருமல், தொண்டை வலிகள் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பிற காய்ச்சலின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். மேலும் உயிருக்கு ஆபத்தான நிமோனியா காய்ச்சலை உருவாக்கலாம். கம்போடியாவில் 2003 முதல் 2014 வரை 56 பேர் H5N1 வைரஸால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களில் 37 பேர் மரணமடைந்ததாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Comment