5-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார்- மத்திய அரசு அறிவிப்பு..!

கடந்த 13-ம் தேதி முதல் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உட்பட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி நோக்கி செல்லும் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு விவசாயிகளுடன் இதுவரை நடத்திய 4 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

சண்டிகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா மற்றும் நித்யானந்த் ராய் ஆகிய ​​மூன்று மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு விவசாயிகளுடன் 4-வது சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். அப்போது விவசாயிகளின் நலன் கருதி 5 ஆண்டுகளுக்கு அரசு மூலம் பருப்பு, மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதாக கூறினர்.

பேச்சுவார்த்தைகள் தோல்வி.. மீண்டும் டெல்லி நோக்கி பேரணி..!

5 ஆண்டுக்கு குறைந்தபட்ச ஆதார விலையில் பருப்பு, மக்காச்சோளம், பருத்தி ஆகியவை வாங்குவதாக மத்திய அரசு கூறியதை விவசாய சங்கத் தலைவர்கள் நிராகரித்தனர். மேலும், இன்று முதல் மீண்டும் டெல்லிக்குள் நுழைய ‘டெல்லி சலோ’ போராட்டத்தைத் தொடரப்போவதாக அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில், 5-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் என  மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தனது எக்ஸ் தளத்தில்  “நான்காவது சுற்றுக்குப் பிறகு, ஐந்தாவது சுற்றில் அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை, ஓய்வூதியம், FIR என அனைத்துப் பிரச்னைகளையும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. விவசாயி தலைவர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறேன். அமைதியைப் பேணுவது நமக்கு முக்கியம்” என பதிவிட்டுள்ளார்.

 

 

Leave a Comment