மக்களே…தமிழகம் முழுவதும் இவை கட்டாயம்;மீறினால் அபராதம் – தமிழக அரசு போட்ட உத்தரவு!

நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.அதன்படி,தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,466 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.7,458 பேர் சிகிச்சையில் உள்ளனர்.குறிப்பாக,சென்னையில் மட்டும் 624 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்றும்,கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக,தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

“தற்பொழுது கொரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது.மேலும் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை,செங்கல்பட்டு, திருவள்ளூர்,காஞ்சிபுரம்,கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகின்றது. இத்தெற்றானது பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல்,பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருத்தல் போன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால் கோவிட் தொற்று அதிகரித்து வருகின்றது.

இதை தவிர்க்க பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல்,சமூக இடைவெளி கடைப்பிடித்தல்,முகக்கவசம் சரியாக வாய் மற்றும் மூக்கை மூடியவாறு அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் உரிய நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நோய் தொற்று பரவலை கட்டாயமாக கட்டுப்படுத்த முடியும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும், கொரோனா வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீதும் தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-இன் படி அபராதம் விதிக்கப்படும்”,என்று தெரிவித்துள்ளது.

 

Leave a Comment