ஜெர்மனியில் பரபரப்பு! 2ம் உலகப் போர் வெடிகுண்டு கண்டெடுப்பு..13,000 பேர் அவசர அவசரமாக வெளியேற்றம்!

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி மீது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்களை அந்நாட்டு அரசாங்கம் அவசர அவசரமாக வெளியேற்றி உள்ளது. இதனால், ஜெர்மனியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதாவது, ஜெர்மனியின் மேற்கு பகுதி நகரமான டஸ்ஸல்டார்ப் பகுதியில் உள்ள மிருகக்காட்சி சாலைக்கு அருகில் இரண்டாம் உலகப் போரின்போது வீசப்பட்ட 1 டன் எடையுள்ள வெடிக்காத நிலையில் ஒரு வெடிகுண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அப்பகுதி உள்ள குடியிருப்பாளர்களை தற்காலிகமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம் கேட்டுக் கொண்டது. அதன்படி, கிட்டத்தட்ட 13,000 தற்காலிகமாக வெளியேற்றப்பட்டன. வெடிகுண்டு இருந்த இடத்திலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களையும் அந்த பகுதியை காலி செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர். மக்கள் வெளியேற்றப்பட்டு, அப்பகுதிகளில் உள்ள சாலைகள் மூடப்பட்டன. சில குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது தங்கள் செல்லப்பிராணிகளை அவர்களுடன் அழைத்து சென்றனர்.

இதனிடையே, காவல்துறையும், வெடிகுண்டு நிபுணர்களும் இணைந்து வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் ஜெர்மன் செய்தி நிறுவனமான Deutsche Welle (DW) கூறியுள்ளது. இருப்பினும், வெடிகுண்டு அகற்றப்பட்டதாக மற்றும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மேலும், இரண்டு உலகப் போர்களில் வீசப்பட்ட எஞ்சிய ஆயிரக்கணக்கான குண்டுகள் இன்னும் ஜெர்மனியில் புதைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுபோன்று, 2017-ஆம் ஆண்டில், பிராங்பேர்ட்டில் 1.4 டன் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது, 65,000 மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதேபோல், டிசம்பர் 2021-இல், முனிச் நிலையத்திற்கு அருகிலுள்ள கட்டுமான தளத்தில் 2ம் உலகப் போரின் வெடிகுண்டு வெடித்தது. நான்கு பேர் காயமடைந்தனர் மற்றும் ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது என கூறப்படுகிறது.

இதனிடையே, 19-ம் நூற்றாண்டின் மத்தியில் 1939-லிருந்து 1945 வரை உலகின் பெரும்பாலான நாடுகள், ஆக்ஸிஸ் (Axis) மற்றும் அல்லீஸ் (Allies) என இரு அணிகளாக பிரிந்து போரிட்டன, இந்த போர் இரண்டாம் உலக போர் என அழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் விமானப்படைகள் ஐரோப்பாவில் 2.7 மில்லியன் டன் குண்டுகளை வீசின. அதில் பெரும்பாலான வெடிகுண்டுகள் ஜெர்மனி மீது வீசப்பட்டது.

இவற்றில் பல வெடிகுண்டுகள் வெடித்தாலும் ஒரு சில வெடிகுண்டுகள் வெடிக்காமல் பூமியில் புதைந்தன. இரண்டாம் உலகப் போர் முடியும் நேரத்தில் ஜெர்மனியின் பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இதனால் பல வெடிகுண்டுகள் பூமிக்கு அடியில் வெடிக்காமல் புதைந்தன. எனவே, பல வருடங்கள் ஆன பிறகும் பூமியில் வெடிக்காமல் புதைந்துள்ள வெடிகுண்டுகள் அவ்வபோது கண்டறியப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. தற்போது, அதுபோன்ற வெடிகுண்டு ஒன்று ஜெர்மனியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.