ஒரு மாற்றுத்திறனாளி கூட மன வருத்தம் அடையக்கூடாது.. முதலமைச்சர் ஸ்டாலின் உரை!

சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் கூட்டம் நடைபெற்றது. அதாவது, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாற்றுத்திறனாளி நலத்துறை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம், அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்பட்டது.

தமிழகத்தில் ரூ.1,763 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், துறை சார்ந்து அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது முதலமைச்சர் முக ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு கொண்டுவந்துள்ள திட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றினார்.

அவரது உரையில், மாற்றுத்திறனாளிகளின் நலம் பேணும் அரசாக திமுக அரசு விளங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் கண்ணியம், தனிப்பட்ட சுதந்திரம் உள்ளிட்டவற்றை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நலனில் திமுக அரசு கவனம் செலுத்தி வருகிறது. அனைத்து உயிர்களும் ஒன்று, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை.

ஒரு மாற்றுத்திறனாளி கூட மன வருத்தம் அடையக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது.  மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.64 கோடியில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவி தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு மகளிர் உதவித் தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது மாற்றுத்திறனாளிகளுக்கு 22 சிறப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது என திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் உரையாற்றினார்.