எண்ணெய் கசிவு : கூடுதல் நிவாரணம் வழங்குக தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் பெய்த கனமழையின் போது  வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ளத்தின் போது சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவன வளாகத்திலிருந்து எண்ணூர் முகத்துவார பகுதியில் வெள்ள நீரோடு எண்ணெய்யும் சேர்ந்து கசிந்து வந்தது.  இதனால் கடலோர மீனவ கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளில் எண்ணெய் படிந்து சேதம் ஏற்பட்டது.

இதனையடுத்து, சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவிப்பு வெளியீட்டு இருந்தார். அதன்படி, 6,700 பேருக்கு தலா 7,500 ரூபாயும், 2,300 மீனவ கிராம மக்களுக்கு 12,500 ரூபாயும், படகுகளை சரிசெய்ய ரூ.10,000-மும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்கவேண்டும் என திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். அதன்படி, எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்குவதோடு, அவர்களின் படகிற்கு ரூ.50,000, கண்ணாடி இழை படகிற்கு ரூ.30,000, மீன்பிடி வலைக்கு ரூ.25,000-ஐ நிவாரணமாக விடியா திமுக அரசு வழங்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

இதைப்போலவே, இதற்கு முன்னதாக மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ரூ.6,000 நிவாரணத் தொகையை ரூ.15,000 உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.