கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை.! இபிஎஸ் வலியுறுத்தல்.!

கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என எடப்பாடி பழனிச்சாமி டிவிட்டரில் வலியுறுத்தியுள்ளார்.

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனது காவலாளி துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது அவரது உடல் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உயர் பதவியில் இருக்கும் காவல்துறை அதிகாரியின் தற்கொலை சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

விஜயகுமார் மறைவு குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்,  கோவை சரக காவல்துறை டிஐஜி திரு.விஜயக்குமார் IPS அவர்கள் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். காவல்துறை துணை கண்காணிப்பாளராக தனது பணியை துவங்கி , பின்னர் நேரடியாக இந்திய காவல் பணிக்கு நேரடியாக தேர்வாகி, டிஐஜி அளவிற்கு தன்னைத்தானே வளர்த்துக் கொண்ட பெருமைக்குரிய விஜயக்குமார் அவர்களின் பணி போற்றத்தக்கது. அவரின் மறைவு காவல்துறைக்கு பேரிழப்பு ,அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் , சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். என பதிவிட்டு இருந்தார்.

மேலும், காலையில் வழக்கமான நடைபயிற்சி முடித்து வந்த விஜயக்குமார் அவர்கள் தனது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகின்றன, இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஆகவே விஜயகுமார் IPS அவர்களின் தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன். என அதில் குறிப்பிட்டுள்ளார்.