நியூசிலாந்து பாராளுமன்ற தேர்தல்… இந்தியாவை சேர்ந்த டாக்டர் வெற்றி…

நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட, இந்தியாவை சேர்ந்த டாக்டர் கவுரவ் சர்மா வெற்றி பெற்றுள்ளார்.

பசிபிக் பெருங்கடலில் உள்ள  தீவு நாடான நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் வசித்து வருபவர்  டாக்டர் கவுரவ் சர்மா, 33. இவர் இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தின் ஹமிர்பூரை சேர்ந்தவர் ஆவார்.  இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், குடும்பத்தினருடன் நியூசிலாந்து சென்றவர். நியூசிலாந்தில் படித்து, டாக்டர் பட்டம் பெற்ற கவுரவ் சர்மா, அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலையில், வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். ஹாமில்டன் நகரில், டாக்டராக சேவையாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் சமீபத்தில் நடந்த நியூசிலாந்து நாடாளுமன்ற தேர்தலில், தற்போதைய பிரதமர் ஜெசிந்தா தலைமையிலான தொழிலாளர் கட்சி சார்பில்,ஹாமில்டன் மேற்கு தொகுதியில் போட்டியிட்டார்.

  இவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய கட்சி வேட்பாளர் டிம் மசிண்டோவை விட, 4,425 ஓட்டுகள் அதிகம் பெற்று, கவுரவ் சர்மா வெற்றி பெற்றுள்ளார். இது குறித்து கவுரவ் சர்மா கூறும்போது, ”இந்த வெற்றியின் மூலம், மக்களின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்திலும் குரல் கொடுப்பேன்,” என்றார். இவரது இந்த வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த ஹிமாச்சல் மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், ”நியூசிலாந்து நாடாளுமன்ற  தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம், நம் நாட்டிற்கும், எங்கள் மாநிலத்திற்கும் அவர் பெருமை சேர்த்துள்ளார்  எனக் கூறியுள்ளார்.