இனி கவலைவேண்டாம் – 10-ம் வகுப்பு முடித்து, 11-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு!

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் முக்கிய அறிவிப்பு.

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கொ.வீர ராகவ ராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக இத்துறையின் இணையதளமான https://tnvelaivaaippu.gov.in -ல் பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு ஏற்படும் போக்குவரத்துச் செலவு, நேரம், தேவையற்ற அலைச்சல் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்கள் ஆகியவை தவிர்ப்பதற்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், 2020-2021-ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் நாளை (4ம் தேதி) வழங்கப்பட உள்ளது.

இதனால், நாளை முதல் 18-ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இவ்வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம். மேலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் https://tnvelaivaaippu.gov.in-ல் தங்கள் அளவிலேயே online-ல் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை. சாதி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி பதிவுகள் மேற்கொள்ளலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், மேற்படி பதிவுகள் மேற்கோள்ளும் போது அரசு விதித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளான சமூக இடைவெளி பின்பற்றுதல், முக சுவசம் அணிதல், அவ்வப்போது கைகளை சோப்பினால் கழுவுதல் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்திட அறிவுறுத்தல் போன்றவைகளை அத்தியாவசியம் கடைபிடித்து செயல்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.