இனியும் திமுகவினர் இதை சொல்லி யாரையும் ஏமாற்ற வேண்டாம் – சசிகலா

திமுக தலைமையிலான அரசு, தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட வேண்டும் என்று சசிகலா அறிக்கை. 

தமிழ்நாட்டில் ரவுடிகளால் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவரும் அராஜகங்களாலும், அட்டூழியங்களாலும் பொதுமக்கள் தாங்கிக்கொள்ள முடியாத துயரத்தை சந்தித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக வணிகர்களின் வாழ்வாதாரமே இன்றைக்கு பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

நேற்றைய தினம் விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்குள் திடீரென புகுந்த கஞ்சா போதையில் இருந்த 2 ரவுடிகள் கடையில் இருந்த ஊழியர்களிடம் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த இரு ரவுடிகளில் ஒருவர் திமுக கட்சியின் பனியனை அணிந்து இருப்பதால் திமுகவை சேர்ந்தவர்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

அச்சமயம் இதனை தட்டிக் கேட்ட சூப்பர் மார்க்கெட் ஊழியரான இப்ராஹீம் மீது கஞ்சா போதையில் இருந்த திமுக ரவுடிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த இப்ராஹீம் பரிதாபமாக உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. அதிலும் புனித ரமலான் நோன்பு இருக்கின்ற இந்த நேரத்தில் கடை ஊழியர் இப்ராஹீம் கொல்லப்பட்டு இருப்பது யாராலும் தாங்கிக் கொள்ள முடியாதது.

ஆனால் இதைப்பற்றியெல்லாம் ஏதும் அறியாதவராக தமிழக முதல்வர் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் சட்டப்பேரவையில் தற்போது ஒரு விளக்கத்தை அளித்து இருக்கிறார். அதாவது இந்த சம்பவம் நடந்ததற்கு குடும்ப பிரச்சனையால் ஏற்பட்ட தகராறு தான் காரணமாம். இதைத்தான் அனைவரும் நம்ப வேண்டுமாம்.

எனவே, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இந்த லட்சணத்தில் இருந்தால், பொதுமக்களின் உயிருக்கு யார் பாதுகாப்பு அளிப்பது என்று தெரியவில்லை? அதிலும் கடை ஊழியர் இப்ராஹீம் தாக்கப்பட்டுள்ள மளிகை கடைக்கு 12 மீட்டர் தொலைவில் தான் தாலுகா காவல்நிலையமும் அமைந்துள்ளது.

அதில் சுமார் 80 காவலர்கள் வரை பணியில் இருந்துள்ளனர். ஆனால் இந்த அராஜகத்தை தடுக்க ஒருவர் கூட வராமல் வேடிக்கை பார்த்த அவலமும் நிகழ்ந்துள்ளது. எனவே இனியும் திமுகவினர் தங்களை சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்று சொல்லி யாரையும் ஏமாற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

திமுக தலைமையிலான அரசு தமிழ்நாட்டை அச்சுறுத்திவரும் கஞ்சா போதை கலாச்சாரத்தை உடனே தடுத்து நிறுத்திட உறுதியான, நிரந்தரமான நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேலும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Comment