ரூ.50,000-க்கு கீழுள்ள வணிகவரி நிலுவை தள்ளுபடி..! முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

நேற்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில்  தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரானது வரும் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த  தீர்மானம் அதிமுக, பாமக ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், இன்று 2-வது நாளாக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சிறு வணிகர்கள் பயன்படக்கூடிய வகையில் சமாதான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வணிகவரித்துறையில் பணிச்சுமை அதிகரிக்கிறது. இதனால் வணிகர்களும் சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறார்கள். அரசுக்கு வரவேண்டிய வருவாயும் வராமல் உள்ளது, நிலுவையில் உள்ள வரியை வழங்குவதற்கு அரசு சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வணிகர்கள் முன் வைத்தனர். அதற்காக புதிய வடிவத்தில் சமாதான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு வணிகவரி வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. நிலுவைத் தொகை செலுத்துவதில் சலுகை வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், 95 ஆயிரம் வணிகர்களுக்கு நிலுவை வரி தள்ளுபடி செய்வதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

அதன்படி ரூ.50 ஆயிரத்திற்கும் கீழ் உள்ள தொகைக்கான வணிகவரி, வட்டி, அபராத தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இதன் மூலம் 95 ஆயிரம் சிறு வணிகர்கள் பயனடைவார்கள். வணிகர்கள், வணிகவரித்துறை இடையேயான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இந்த சமாதான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.