டெல்லி சேவைகள் மசோதா! மக்களவையில் இன்று.. புதிய அமளிக்கு வாய்ப்பு!

டெல்லி உள்ள அரசு அதிகாரிகளின் நியமனம், பணியிட மாற்றம், பதவிக்காலம், ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்குவது உள்ளிட்டவை தொடர்பான அதிகாரங்களை வழங்கும் டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றான ஒரு சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. அதன்படி டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், மாநில அரசின் அதிகாரம்  மத்திய அரசின் வசம் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. மத்திய அரசின் சட்டத்துக்கு டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக எதிர்த்தது. மத்திய அரசு கொண்டுவரவுள்ள மசோதாவை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்க பல கட்சிகளின் ஆதரவையும் அக்கட்சி நாடி வந்தது.

இந்த சமயத்தில், டெல்லியில் மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நியமனம், பணியிட மாற்றம் செய்வது தொடர்பான அதிகாரங்களை வழங்கும் டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றான மசோதா நேற்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி சேவைகள் சோதாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் மக்களவையில் தாக்கல் செய்தார்.

அவசர சட்டத்துக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட டெல்லி சேவைகள் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். மசோதா மீதான விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எந்த சட்டத்தையும் கொண்டு வரும் உரிமை அரசுக்கு இருப்பதாக வாதத்தில் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய மசோதா, டெல்லியின் அதிகாரத்தை மத்திய அரசு கட்டுப்படுத்தும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு ஆதரவான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறும் வகையில் உள்ளது. டெல்லியில் துறைகள் சார்ந்த விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் டெல்லி மாநில அரசுக்கு உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டிருந்தது. ஆனால், உச்சநீதிமன்றம் தீர்ப்பை மீறும் வகையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில், டெல்லி சேவைகள் மசோதா இன்று மக்களவையில் புதிய அமளியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த அவசரச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இருப்பினும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, ராஜ்யசபா மற்றும் லோக்சபா இரண்டிலும் கணிசமான பிரதிநிதித்துவத்துடன், மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.