கள்ளச்சாராயம் விவகாரம்! இதுவரை 66 நபர்கள்.. – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பேட்டி.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மரக்காணம், மதுராந்தகம் கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அமைச்சர் கூறுகையில், கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 66 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 13 இறப்புகள் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சென்று பார்வையிட உள்ளேன் என்றார்.

கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்கவும், மெத்தனால் வேதிப்பொருளை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராயம் அருந்திய 66 பேர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைவாகவே இருக்கிறது. 15,853 கொசு மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் கையிருப்பில் உள்ளன. டெங்கு சிகிச்சை பெறுபவர்களை தொடர்ந்து கண்கானிக்க அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார் எனவும் கூறினார்.