வயநாட்டில் வேட்புமனு தாக்கல்.! மக்கள் வெள்ளத்தில் ராகுல் காந்தி.!

Rahul Gandhi : கேரளா வயநாடு தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

தமிழகத்தில் 39 தொகுதிகள் புதுச்சேரி என 40 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நாளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது போல, அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட தேர்தல் நாளான ஏப்ரல் 28ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 2019இல் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தியை வெற்றிபெற செய்த வயநாடு தொகுதியில் தான் இந்த முறையும் ராகுல் காந்தி போட்டியிட உள்ளார்.

இதற்காக இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்ய வயநாடு வந்து இருந்தார் ராகுல் காந்தி. அவருடன் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் ஆகியோர் உடன் வந்திருந்தார். அதன் பிறகு வயநாடு ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றார் ராகுல் காந்தி.

வழிநெடுகிலும், காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் காந்தி புகைப்படம் , காங்கிரஸ் கட்சி கொடிகள் ஆகியவற்றுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு மக்கள் மத்தியில் உரையாற்றிவிட்டு, பின்னர் வயநாடு தேர்தல் அலுவலரிடம் தனது வேட்புமனுவை அளித்தார் ராகுல் காந்தி.

இவரை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா அவர்களின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார். அவரும் இன்று வயநாடு தொகுதியில் போட்டியிட தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.