காவேரி நீர் விவகாரம் : மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!

குறுவை சாகுபடிக்காக காவேரி நீரை திறந்து விட கோரி மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடாததால், தமிழ்நாட்டில் தற்போது குறுவை சாகுபடிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக காவிரியிலிருந்து உரிய நீரினை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிடகோரி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திற்க்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (19-7-2023) எழுதிய கடிதத்தை,  தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று (20-7-2023) புதுதில்லியில் நேரில் சந்தித்து வழங்கினார்.

முதல்வர் எழுதிய அந்த கடிதத்தில்,காவிரி டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி முக்கியமாக உள்ள நிலையில் இந்த ஆண்டு குறுவை சாகுபடியை விவசாயிகள் உரிய நேரத்தில் மேற்கொள்ள ஏதுவாக மேட்டூர் அணை கடந்த ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டது என்றும், 2018 பிப்ரவரி 16 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் நீர் திறக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஜூன் 1 முதல் ஜூலை 17 வரை பிலிகுண்டுலுவில் பெறப்பட்ட நீர் இருப்பு 3.78 டிஎம்சி மட்டுமே என்றும் இந்தக் காலகட்டத்தில் பெறவேண்டிய தண்ணீர் அளவு 26.32 டிஎம்சி. என உள்ள நிலையில் 22.54 டி.எம்.சி. நீர் பற்றாக்குறைபாக உள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிலிகுண்டுலுவில் இந்த 3.78 டிஎம்.சி நீர் வரத்துகூட கே.ஆர்.எஸ் மற்றும் கபினி நீர்த்தேக்கங்களுக்கு கீழே. கட்டுப்பாடற்ற இடைநிலை நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து பிலிகுண்டுலு வரை பாய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தென்மேற்கு பருவமழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், ஜூலை மாதத்தில் மழை வேகமெடுத்துள்ள நிலையில், 2 அணைகளில் இருந்தும் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை என்றும் இதனால் மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது என்றும் தற்போதைய நீர் இருப்பு 20 நாட்கள் மட்டுமே பாசனத்திற்குப் பயன்படும் என்றும் முதல்வர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை குறைவாக இருப்பதால், குறுவை சாகுபடி மேட்டூர் அணையில் இருந்து வரும் நீரை மட்டுமே நம்பியுள்ளதாகவும். குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து ஆரம்பத்தில் வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது அது 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே நியாயமான நீர் மேலாண்மை மூலம் நெருக்கடியைச் சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருவதாகவும் தண்ணீர் தேவைக்கும். நீர்வரத்திற்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகமாக இருப்பதால் கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரைக் கொண்டுதான் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்திட இயலும் எனவும் முதல்வர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர், கடந்த 5-7-2023 அன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து, இந்த முக்கியமான பிரச்சினையில் தலையிட்டு தண்ணீர்ப் பற்றாக்குறையை ஈடுசெய்ய கர்நாடகத்திற்கு அறிவுறுத்துமாறு முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 3-7-2023 தேதியிட்ட கடிதத்தின்படி, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களிலும் இந்தப் பிரச்சினையை தமிழ்நாடு அரசின் சார்பில் எடுத்துச் சென்றதாகவும் காவிரி நீர் மேலாண்ணா ஆணையம், 4-7-2023 தேதியிட்ட தனது கடிதத்தில், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தால் திருத்தப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி பிலிகுண்டுலுவில் நீரோட்டத்தினை உறுதி செய்யுமாறு கர்நாடகாவுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையிலும் கர்நாடக அரசு. மாண்புமிகு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த மாதாந்திர அட்டவணையைப் பின்பற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனவும்  மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.