மின் கட்டண முறைகளை மாற்றி அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளின் கோரிக்கைகளை பரிசீலித்து, மின் கட்டண முறைகளை மாற்றி அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளுக்கு சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, பருவகாலத் தேவைக்கு ஏற்ப மாறும் தன்மையுள்ள மின்பளுவை கொண்ட தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு நிலை கட்டணத்தை குறைத்து கொள்ளும் வகையில், அனுமதிக்கப்பட்ட மின்பளுவினை குறைத்துக்கொள்ளவும், மேலும் தேவைப்படும்போது அனுமதிக்கப்பட்ட மின்பளுவிற்குள் உயர்த்திக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. இச்சலுகையை ஆண்டு ஒன்றுக்கு நான்கு முறை பயன்படுத்திக் கொள்ளலாம். சூரிய ஒளி சக்தி மேற்கூரை மின் உற்பத்தி செய்ய மின் இணைப்புகளுக்கு 15% மூலதன மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 கிலோ வாட் க்கு குறைவாக உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு வீதப்பட்டி IIIB லிருந்து IIIA1 வீதப்பட்டிக்கு மாற்றுவது குறித்து தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்துரு பெற்றபின் பரிசீலிக்கப்படும் எனவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். அண்மையில் மாற்றப்பட்ட மின்சார நிலை கட்டணத்தால் சிறு, குறு தொழில் துறையினர் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டப்பட்டது. நிலை கட்டணத்தை குறைக்க கோரி செப்.25ல் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வேலை  நிறுத்தம் அறிவித்துள்ளது.