விருது வென்ற கடைசி விவசாயி படக்குழுவினருக்கு முதல்வர் வாழ்த்து..!

2021ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படம், சிறந்த தமிழ் திரைப்படமாகவும் `கடைசி விவசாயி‘ தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2021ம் ஆண்டு, சிறப்பு பிரிவில் ’கடைசி விவசாயி’ படத்துக்காக மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு  விருது வழங்கப்பட்டுள்ளது. கடைசி விவசாயிக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘69-வது தேசிய திரைப்பட விருதில் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும்  கடைசி விவசாயி படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்!இரவின் நிழல் படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள ஷ்ரேயா கோஷல், ‘கருவறை’ ஆவணப்படத்துக்காக சிறப்பு விருது வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வி படத்துக்கான பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

மறுபுறம், சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான NargrisDutt   விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளைக் காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது.’ என பதிவிட்டுள்ளார்.