நமது மல்யுத்த சகோதரிகளை மத்திய அரசு கைவிட்டுள்ள்ளது.! மே.வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி கடும் விமர்சனம்.!

இந்திய மல்யுத்த சங்கத்திற்கு புதிய தலைவரை தேர்தல் மூலம் 45 நாட்களுக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும் என உலக மல்யுத்த சம்மேளனம் கடந்த மே மாதம் உத்தரவிட்டு இருந்தது. அதன் பிறகு ஓய்வுபெற்ற ஜம்மு காஷ்மீர் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தேர்தல் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது.

இருந்தாலும் கிட்டத்தட்ட 2 மாதங்கள் ஆகியும் தேர்தல் நடத்தி தலைவரை தேர்ந்தெடுக்காத காரணத்தால் இந்திய மல்யுத்த சம்மேளனதிற்கான உரிமத்தை ரத்து செய்து உலக மல்யுத்த சம்மேளனம் உத்தரவிட்டது.

உரிமத்தை இழந்த இந்திய மல்யுத்த சம்மேளனம் விவகாரம் குறித்து, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி கூறுகையில்,  உலக மல்யுத்த சம்மேளனம், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடைநீக்கம் செய்துள்ளது என்பதை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன்.

இது ஒட்டுமொத்த தேசத்திற்கே கடும் அவமானம். மல்யுத்த வீராங்கனைகளின் அவல நிலையைக் கண்டு வெட்கக்கேடான திமிர்த்தனமாகவும், துணிச்சலாகவும், புறக்கணித்தும், நமது மல்யுத்த வீரர்களை மத்திய அரசு கைவிட்டுள்ள்ளது.

மத்திய அரசும், பாஜகவும் நம் சகோதரிகளை பெண் வெறுப்பு மற்றும் கசப்பான ஆண் பேரினவாதத்தால் துன்புறுத்திக் கொண்டே இருக்கின்றன. தார்மீக திசைகாட்டி இல்லாதவர்கள் மற்றும் தேசத்தின் போராடும் மகள்களின் கண்ணியத்திற்காக நிற்க முடியாதவர்களை இந்தியா எதிர்த்து நின்று தண்டிக்க வேண்டும். என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.