India-Canada : இந்தியா – கனடா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் திடீர் நிறுத்தம்.!

கனடாவும் இந்தியாவும் 2010ஆம் ஆண்டு முதல் ஒரு விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் பற்றி கலந்தாலோசித்து வருகிறது. கடந்த ஆண்டு மீண்டும் இருநாட்டு வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தை மூலம் கடந்த மே மாதம் இந்தியாவும் கனடாவும் இந்த ஆண்டு வர்த்தகத்தை அதிகரித்து, முதலீட்டை விரிவுபடுத்தவும் ஒர் ஆரம்ப ஒப்பந்தத்தை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இந்நிலையில் திடீரென இந்தியாவுடனான முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்திவிட்டதாக கனடா கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்து விட்டது. இது குறித்து கனடா நாட்டு அரசு அதிகாரி கூறுகையில், “வர்த்தக பேச்சுவார்த்தையில் சில சிக்கலான செயல்முறைகள் இருப்பதை நாங்கள் காண்கிறோம். அதனால் இந்த பேச்சுவார்த்தை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.’ என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து, கனடாவுக்கான இந்தியத் தூதர் சஞ்சய் குமார் வர்மா, நேற்று (வெள்ளிக்கிழமை) கனடா நாட்டு பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், பேசுவரத்தையை இடைநிறுத்தம் செய்ய கனடா நாட்டு அதிகாரிகள் கோரியதாகவும், ஆனால் அதற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் அடுத்த வாரம் டெல்லியில் நடைபெற உள்ள G20 உச்சிமாநாட்டில் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வரவுள்ளார். அப்போது இந்தியா – கனடா நாடுகளுக்கு இடையான வர்த்தக ஒப்பந்தம் பற்றி மீண்டும் ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.