நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவை ஏற்கனவே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்றது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து மணிப்பூர் கலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் சரிவர நடைபெறாமல் இருந்தது.

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பதில் அளிக்க வலியுறுத்தி, மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நீண்ட விவாதத்திற்கு பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது  பேசிய வந்தபோதே எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதுபோன்று, நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதும் அமளியால் முடங்கியது

இருப்பினும், இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டும் உள்ளது. அதில், டெல்லி நிர்வாக  அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பான சட்டம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன. இன்று கடைசி நாளான இன்று மக்களவையில் இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 முக்கிய சட்டங்களில்  பெயரை பாரதிய என மாற்றும் மசோதாவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

இதனிடையே எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின் மக்களவையும் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்தார். அதுமட்டுமில்லாமல், கடைசி நாளான இன்று, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் காங்கிரேசின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மேலும்,  நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பேரணி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.