பாஜக, ஆர்எஸ்எஸ் வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்புகிறது; ராகுல் காந்தி.!

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நாட்டில் வெறுப்பையும், வன்முறையையும் பரப்புவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரம்:

கர்நாடகாவில் வரும் மே 10-ஆம் தேதி அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது, இதற்காக அரசியல் கட்சிகள் பலரும், தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராகுல்காந்தி காங்கிரஸ் சார்பில், கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அப்போது அவர் பேசுகையில், வரும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம் 150 இடங்களில் வெற்றி பெற்று முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வர வேண்டும் என்றும் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்து பேசினார்.

வெறுப்புணர்வை விதைக்கிறார்கள்:

தொடர்ந்து ராகுல் பேசும்போது, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கங்கள், ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தி, நாட்டில் வெறுப்பையும் வன்முறையையும் பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் அவர்கள் ஏழை மற்றும் நலிந்த பிரிவினரிடமிருந்து பணத்தைப் பறித்து, இரண்டு அல்லது மூன்று மடங்கு பெரிய பணக்காரர்களுக்கு வழங்குகிறார்கள் என்று அவர் கூறினார்.

ஆட்சிக்கு வரும்;நம்பிக்கை:

காங்கிரஸ் கர்நாடகாவில் நிச்சயம் ஆட்சிக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தராகுல், தேர்தல் வாக்குறுதிகளை அமல்படுத்துவது குறித்து கட்சியின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் பொய்யான வாக்குறுதிகளை போல, காங்கிரஸ் அளிக்காது என்று அவர் தெரிவித்தார்.

தேர்தல் வாக்குறுதி:

காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில், அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், ஒவ்வொரு குடும்பத்தின் பெண் தலைவிக்கு ரூ. 2,000 மாதாந்திர உதவி, பட்டதாரி இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ 3,000 மற்றும் டிப்ளமோ பெற்றவர்களுக்கு ரூ 1,500(18-25 வயதுக்குட்பட்டவர்கள்) ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டு ஆண்டுகளுக்குவழங்கப்படும் எனவும், ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்றும் அறிவித்துள்ளது.

Leave a Comment